Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை, பிப்.3: குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி மாபெரும் கையெழுத்து இயக்கத்தைத் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 24ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும். என்.ஆர்.சிக்கு வழிகோலும் என்.பி.ஆர். தயாரிப்பதை நிறுத்த கோரியும் பிப்ரவரி 2ம் தேதி முதல் பிப்ரவரி 8ம் தேதி வரை மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்தப்படும் என்று தீர்மானம் நிறைவேப்பட்டது. அதன்படி இன்று காலை முதல் தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் தொடங்கியது.
சென்னை கொளத்தூரில் தொடங்கும் கையெழுத்து இயக்கத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். CAA, NPR மற்றும் NRC ஆகியவற்றை தமிழகத்தில் அனுமதிக்க கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர். இன்று முதல் பிப். 8 வரை தமிழகம் முழுவதும் ஒருகோடி பேரிடம் கையெழுத்து பெற்று, குடியரசு தலைவரிடம் அளிக்கப்படவுள்ளது. திமுக மற்றும் அதன் தோழமைக்கட்சிகள் சார்பில் பிப். 8 வரை தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடைபெறுகிறது. கொளத்தூரில் பொதுமக்களை நேரில் சந்தித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கையெழுத்து பெற்று வருகிறார்.
ஆவடியில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும், கும்பகோணத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியும், சென்னை துறைமுகத்தில் மதிமுக பொது செயலாளர் வைகோ எம்.பியும், சென்னை சைதாப்பேட்டையில் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லக்கண்ணு ஆகியோர் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தனர்.